ஈ(ர)ழத்துளிகள்
பதுங்கியிரு இப்பதுகுழியில்
அப்பா வந்தாலும் வருவேன்
________________________________________
கணக்குப் பாடம்
ஒன்று
இரண்டு
மூனு
நாலு
அம்மா மொத்தம் நாலு குண்டுகள்
உன் மீது?
________________________________________
மழை வேண்டாமென வேண்டும்
விசித்திர மனிதர்கள் நாங்கள்..
குண்டுமழை வேண்டாமென வேண்டும்
மனிதர்கள் நாங்கள்.
சில சமயம் சந்தேகம் வலுக்கின்றது
நாங்கள் மனிதர்கள் தானா?
________________________________________
அப்பா எனக்கு
பேய் பூதம் பிசாசு என
வரைந்தேதும் காட்டியதில்லை
நேரில் நிறைய பார்த்ததுண்டு
________________________________________
இயலாமையின் உச்சத்தில்
வழிவதெல்லாம் மெளனம் தான்
அழுவதற்கும் சக்தியெல்லாம்
என்றோ போய்விட்டது
________________________________________
ஆற்றின் நிறமென்னவென கேட்டதற்கு
சிகப்பு என்கின்றான்.
என்னிடம் இனி கேள்வியில்லை.
No comments:
Post a Comment