விடியலின் வெளிச்சம்
புழுக்கள் ஊராத
பழுப்பேறிய கஞ்சிக்களையத்தின்
ஓரத்தில் ஒதுங்கியிருந்த
அறை வேக்காடு
திணைச் சோற்றினை
தேடி எடுத்து
ஊமை குழந்தைக்கு
புகட்டஎத்தனிக்கிறாள்
ஈழத்தாயொருத்தி...
சற்றே தொலைவில்
பெருத்த சத்தத்துடன்
அதிர்ந்து அடங்கும்
இன்னும் ஒரு கன்னிவெடியில்
அது தவறி எங்கோ விழுந்துவிட
அடங்காத பசியில்
அவளின் வற்றிய முளைகளை
வெறுமையாய் பார்த்தபடி
மடியில் கிடக்கிறது
அந்த செவிட்டுக் குழந்தை...
காம்பிழந்த, இதழ் இழந்த,
மகரந்தம் இழந்த
நசுங்கியபூக்களாய்
எம் தமிழ் பெண்டுபிள்ளைகள்
மானத்தைக் கூட
அரைகுறையாய்மட்டுமே
மறைக்க முடிந்தபடி...
ஈழ ரத்தம்
தோய்ந்த துப்பாக்கி ரவைகள்
கொன்று தீர்த்த
பிஞ்சு உடல்களின்
மேல்பதிந்து கிடக்கின்றன
ராணுவ பூட்சுகள்...
கரும்புகை மறைக்காத
வானத்தைப் பார்த்ததில்லை...
எங்கள் சகோதரனோ,சகோதரியோ
சடலமாய் எரியாமல்
கரும்புகை வருவதில்லை...
விடியலின் வெளிச்சம்
இன்றும் தேடுகிறோம் நாங்கள்...
No comments:
Post a Comment