Wednesday 19 December 2012

பரிசுத்தர்...

பிரபஞ்சம் முழுதும்
செதுக்கிய சிற்பி
செல்லப்பிள்ளையாய்
படைத்தவன்
மடியில்...

என்பாவம் போக்கிட
தகப்பன் அனுப்பிய
ஆண்டவர் அவரை...

முள்ளாள்
கிரீடம் செய்து
அழுந்த பதித்து
சிரசில் வடியும்
குருதியைப் பார்த்து
ரசித்தேன்...

தேவமைந்தனாம்
கடவுள் இயேசுவை
காரி உமிழ்ந்து
காலால் உதைத்து
தரையில் தள்ளினேன்...

கழுமரத்தில்
மகா புனித்தை
ஆணிகளால் அடித்து
தொங்கவிட்டுச்
சிரித்தேன்...

காய்கிற வெயிலில்
சட்டையை உரித்து
அலங்கோலமாக்கி
வேடிக்கை
பார்த்தேன்...

ஜீவ நீர் தந்த
தூயவர் அவரை
தாகமாய் கிடந்து
சாவதைப் பார்த்து
சந்தோஷித்து
நின்றேன்...

நேர்த்தியாய் செய்த
முள்ளாள் ஆன
சாட்டையால் அடிக்க
தெரிக்கிற உதிரம்
முகத்தில் பட்டு
சிரித்து மகிழ்ந்தேன்...

அத்தனை பாவமும்
என்னிலும்
என்
சந்ததி மேலும்
விழட்டும் என்று
சத்தியம்
ஏற்றுக்கொண்டேன்...

கூரிய ஈட்டியால்
குத்திய விலாவில்
வடிந்த
இரத்தமும் நீரும்
சிந்திய போது
பூமி முழுதும்
குலுங்க அழுதது...

அந்தகாரம்
பூமிமுழுதும்
ஆக பரவி
இயற்கையெல்லாம்
மௌனமாய்
இருந்தது கண்டு
உள்ளுக்குள் பயந்தேன்...

இத்தனை
கொடுமை நான்
செய்தும்...
எனக்காய் ஜெபிக்கிற
இயேசுவே!

என்பாவம்
போக்கிட
பலியாய் வந்த
உம்மை கொன்று
இன்னும் பாவம்
கூட்டிச்சேர்த்தேன்...

என் பிணி சுமந்து
பசி அது போக்கி
தொழுநோய் தொட்டு
தூர விரட்டி
முடங்கிய கால்களை
நடக்க விட்டு
குருட்டுக்கண்களை
பார்க்கச்செய்து...

இத்தனை புதுமை
எனக்கு
நீர் செய்தும்
எத்தனை கொடுமை
உமக்கு நான்
செய்தேன்...

சாம்பல் தடவி
சாக்கு உடுத்தி
மண்ணில்
உருண்டு பிரண்டு
அழுதாலும்
போகாதய்ய
நான் செய்த பாவம்

ஆண்டவர் இயேசுவே
என்மேல் இரங்கும்
பாவி என்மனதில்
உமது ஆவியை
ஊற்றி
பாவம் கழுவ
சுத்தம் நான் ஆவேன்...

அடித்த ஆணியின்
தழும்புகள் தெரிய
உயிர்த்த
என் இயேசுவே
மீண்டும் வருவார்

மகிமையின் நாதரை
என் ஜீவ நேசரை
ஆசையாய்
வரவேற்று மகிழ்வேன்

இயேசுவின் நாமம்
இனிதான நாமம்
இன்ப நாமம்...!!!




No comments:

Post a Comment