Saturday 12 November 2011

திரு.இரா.எட்வின் அவர்களின் வலைபூவிலிருந்து.....

தெய்வங்களுக்கு சொல்லித் தந்தவன்
பொதுவாகவே நம்முள் புதைந்து புறையோடிப் போயிருக்கும் அழுக்குப் பிடித்து வாடை வீசும் கருத்துப் படிமங்கள் நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், நாம் சற்றும் எதிர்பார்க்காத திக்கிலிருந்து நாம் கனவிலும் எதிர்பார்ப்பதற்கு அந்த நொடி வரைக்கும் நமக்கு நம்பிக்கையே தந்திராத மனிதர்களால் உடைசலைக் காணும்.

அப்படித்தான் படிக்கும் பிள்ளைகளைப் பற்றி நமக்கிருந்த ஒரு முடை நாற்றம் வீசிக் கொண்டிருந்த ஒரு பொதுக் கருத்தை பேய் மழைச்சாரல் தந்த குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த என்னை தங்களது செயலால் சூடேற்றி திமிறேற்றினார்கள்.

"படிச்சவன் நடந்துக்கற மாதிரியா நடந்துக்கற", "படிச்சவன் பேசற மாதிரியா பேசற" என்கிற மாதிரி படித்தவர்களைப் பார்த்து அவர்களது பெற்றோர்களோ, நண்பர்களோ, ஆசிரியர்களோ அல்லது வேறு மற்றவர்களோ கோவம் கலந்த தொனியிலோ அல்லது வருத்தம் தோய்ந்தோ அல்லது ஏளனத் தொனியிலோ கூறுவதைக் கேட்டிருப்போம்.

படித்தவன் எப்படி பேச வேண்டும்?.
படித்தவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கு தெளிவான ஒத்தக் கருத்து எந்த சமூகத்திலும் இந்த நொடியில் இருப்பதாகப் படவில்லை. இதில் இவ்வளவு தயங்க வேண்டிய அவசியம்கூட இல்லை என்றே படுகிறது. இந்தக் கேள்விகளுக்கான ஒத்தக் கருத்தினை நோக்கி எந்த சமூகமும் முதல் எட்டெடுத்துக் கூட வைக்க வில்லை என்று யார் வேண்டுமானாலும் என் தலையில் அடித்தே சத்தியம் செய்யலாம்.

படித்தவன் அதிர்ந்து பேசக் கூடாது. படித்த தமிழனென்றால் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தை நுனி நாக்கில் உளற வேண்டும். நாம் உண்டு நம் வேலை உண்டு என்பதை உணர்ந்து உள் வாங்கி செயல்படுத்த வேண்டும். அவனவன் அவனவன் குடும்பத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டாலே போதும். நாடு தானாக வளப் படும்.

அமெரிக்காவில் மக்கள் தெருவிலே வந்து பெரு முதாளிகள் அரசியலைத் தீர்மானிப்பதை எதிர்த்து போராடுகிறார்களா? அது பற்றி உனக்கென்ன? அது அவன் நாட்டுப் பிரச்சினை. இலங்கையில் கொத்துக் கொத்தாய் கொல்கிறானா?, அறுப்பதற்காகவே வளர்க்கும் செம்மரிகளைக் கூட மூங்கில் பட்டியில் அடைத்து, பகல் வேலையில் அவற்றை சுதந்திரமாய் காலாற மேய வைக்கும் தமிழனை முள் வேளியில் அடைத்து வைத்து அக்கிரமம் செய்கிறானா? விடு அது அவன் உள் நாட்டுப் பிரச்சினை.

எவ்வளவுதான் பாதுகாப்பாய் தப்பிவிட முயன்றாலும் ஈரம் சுரக்கிறதா?. அது தவறு. உடனே ஏதாவது ஒரு வட நாட்டு சேனலை போட்டு மேதைகள் ஆங்கிலத்தில் அலசுவதைப் பார். எந்த விதமான மனித ஈரத்தையும் அவர்கள் உலர வைப்பார்கள். அதையும் மீறிப் பொங்கினால் அவர்களுக்காய் பிரார்த்தனை செய்.

இதைத் தாண்டி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர். இந்த உணர்வுதான் ஞானத்தின் தொடக்கம். தர்க்க நியாயம் பேசுபவர்களிடம் காதைத் தராதே. அவர்கள் தீவிரவாதிகள். உன்னை நம்பி குடும்பம் இருப்பதை உணர். நீ அயோகியத்தனம்செய்யாமல் யோகியனாய் வாழ். இதைத்தான் ஆகப் பெரும்பான்மை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடமும், நண்பர்கள் நண்பர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள்.

இதுதானா படிப்பின் விளைவு?

படித்தவன் யோக்கியனாய் மட்டும் இருந்தால் போதுமா? ஆதிக்க சக்த்திகளின் அத்து மீறலை, அயோகியத் தனத்தை பார்த்து மௌனிப்பதும் அயோகித்தனம் அல்லவா?

ஒரு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கொஞ்சி மகிழ்ந்து சந்தோசித்து இருப்பது குடும்ப விவகாரம். அதில் நாம் தலையிடக் கூடாது. ஆனால் குடித்துவிட்டு வந்து மனைவியை துவைக்கும் கணவனைத் தட்டி கேட்காமல் ‘இது அவர்கள் குடும்பப் பிரச்சினை’ என்று ஒதுங்கினால் அது அயோக்கியத் தனம் அல்லவா?

நல்லாப் படி, நன்கு சம்பாரி, சந்தோசமாய் குடும்பம் நடத்து என்பதைத் தவிர வேறு எதையும் நாம் கற்றுக் கொடுப்பதில்லையோ? மதிப்பெண்கள் தாண்டி சமூக அக்கறையே இல்லாமல் பிள்ளைகளை உருவாக்குகிறோமே... என்று நொந்து நூலாகிப் போன என்னை "அப்படியெல்லாம் இல்லை. உங்களது கழுகுப் பார்வைக்குப் படாமல் ஈரத்தை எங்கள் நெஞ்சிலே பத்திரப் படுத்தி வைத்திருக்கும் நாங்களிருக்கிறோம் . நம்பிக்கையோடு இரு" என்று சமீபத்தில் நடந்த காலாண்டுத் தேர்வில் குறைந்த பட்சம் இரண்டு பாடங்களிலேனும் தேர்ச்சி பெறாத, ஆசிரியர்கள் அதிகம் நம்பிக்கை வைக்காத நான்கு மாணவர்கள் தங்களது மகத்தான செயலால் அறைந்து சொன்னார்கள்.


அன்று காலை தீபாவளிக்கு ஒரு நாள்தான் விடுமுறை என்று பள்ளிகளுக்கு வந்த உத்தரவு மாணவர்களையும் ஆசிரியர்களையும்கொஞ்சம் வருத்தப் பட வைத்திருந்தது. பொதுவாகவே தீபாவளி முதல் நாளே தொடங்கி அதற்கு அடுத்த நாள் வரைக்கும் நீளும். பல ஆசிரியர்கள் என்னை அணுகி, “ தலைவர்ட்ட கொஞ்சம் பேசுங்க சார். வியாழன் ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு அதை ஒரு சனிக்கிழமை பள்ளி வைத்து சரி செய்து கொள்ளலாம்” என்றார்கள்.

கோவப் படுவாரோ என்று தயங்கிக் கொண்டிருந்தேன். பள்ளி விட்டிருந்தது. குடையோடு, மழைக் கோட்டோடு வந்திருந்த பிள்ளைகள் போய் விட்டார்கள். சில பிள்ளைகள் மழைக்கு அங்கும் இங்குமாய் ஒதுங்கியிருந்தனர்.

நமக்கு தீபாவளியில் உடன்பாடு உண்டா இல்லையா? நாம் கொண்டாடுகிறோமா, இல்லையா? என்பதை எல்லாம் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிற தருணம் இதுவல்ல. அதற்கான அவகாசமும் இப்போது இல்லை. சக ஆசிரியர்களின் மன நிலையை, அவர்களது கோரிக்கையை, அதில் உள்ள நியாயத்தை, தலைமை ஆசிரியரிடம் அவ்ர் நல்ல மன நிலையில் இருக்கிறபோது அவர் மனம் நோகாமல் பக்குவமாய் எடுத்துக் கூறி , அவர்களது கோரிக்கையை சேதாரம் இல்லாமல் வென்றெடுக்க வேண்டும் என்கிற கவனத்தோடு அவரது அறைக்குள் நுழைந்தேன்.

எனக்கு அந்த வேலையை தலைமை ஆசிரியர் வைக்கவே இல்லை. நான் உள்ளே நுழைவதைப் பார்த்தவர் , “வா எட்வின், உன்னை கூப்பிட பிரிட்டோவை அனுப்ப இருந்தேன். நீயே வந்துட்ட . வா, உட்கார்”

“என்னங்க அண்ணே?”

“இல்ல, தீபாவளிக்கு அடுத்த நாள் விட்டுட்டு அதை பிறகு ஒரு சனி கிழமை பள்ளி வைத்து சரி செய்துக்கலாம்னு படுது. என்ன சொல்ற?”

“அதுதாங்கண்ணே சரி.

பேசிக் கொண்டிருந்த போதே பலத்த சத்தத்துடன் இடி ஒன்று இறங்கியது. வெளியே திண்ணைக்கு ஓடி வந்தோம். பத்துப் பதினைந்து பிள்ளைகள் நின்று கொண்டிருந்தார்கள். விடாது பெய்து கொண்டிருந்தது. இடியினால் பள்ளிக்கு எந்த சேதமும் இல்லை. அப்பாடா என்றிருந்தது.

உள்ளே போகலாம் என்று நாங்கள் எத்தனித்த போதுதான் அது நிகழ்ந்தது.

எங்கள் பள்ளி சென்னை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. எங்கள் பள்ளிக்கு நேர் எதிர்த்தார்போல் வாகனங்கள் u டேர்ன் போட வசதி உள்ளது.

கடைவீதியிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இளைஞன் மீண்டும் கடைவீதிப் பக்கம் திரும்ப சென்னைலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த மகிழுந்து அவனை இடித்து விட்டு நிற்காமல் பறந்துவிட்டது. அந்தப் பய்யன் பறந்து போய் அந்தப் பக்கம் விழுந்ததை கண்ணாரப் பார்த்தோம்.

அப்படியே உறைந்து போனோம்.

பள்ளிக்குப் பக்கத்திலிருந்து ஆண்களும் பெண்களுமாய் ஒரு சின்னக் கூட்டம் பள்ளியில் கூடிவிட்டது. ஆளாளுக்கு கார்க்காரனை வைது கொண்டிருந்தார்கள். வகை வகையாய் சிலர் சபித்துக் கொண்டிருந்தார்கள்.

எப்போது தங்கள் முதுகளில் தொங்கிய பைகளை இறக்கினார்கள்? எப்போது இறங்கி ஓடினார்கள் என்றெல்லாம் யூகிக்க வாய்ப்பே தரவில்லை. பதினோராம் வகுப்பு பிள்ளைகள் நான்கு பேர் அவனைக் கொண்டு வந்து பள்ளி வராண்டாவில் கிடத்தினார்கள்.

பின் மண்டை சின்னதாய் பிளந்திருந்தது. ரத்தக் கசிவு அதிகமாய் இருந்தது. கசிவு என்பது கூட கஞ்சத்தனம்தான். ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. நால்வரில் ஒருவன் தனது ஈரச் சட்டையை கழட்டி ட்ரத்தம் வரும் இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்தான்.

எந்த ஊர்ப் பையன் அவன் என்று யாருக்கும் விளங்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை. ஒருவன் என்னிடம் வந்தான்.

“கொஞ்சம் செல்லைக் கொடுங்க சார்.”

கொடுத்தேன்.

நூற்றி எட்டை அழைத்தான். அந்த நொடி வரைக்கும் இது அங்கு நின்ற நான் உள்ளிட்ட பெரியவர்கள் யாருக்கும் தோன்றாத ஞானம்.

சற்றைக்கெல்லாம் ஆம்புலன்ஸ் வந்தது.

ஏற்றினார்கள். யாரேனும் கூட வந்தால்தான் நன்றாயிருக்கும் என்றார் ஓட்டுநர். எதை பற்றியும் யோசிக்காமல் ஒருவன் ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டான்.

“ போயி என்னன்னு போன் பன்னு மாப்ள, நாங்க வீட்டுக்குப் போயி அம்மா வந்ததும் ஏதாவது சூடா எடுத்துட்டு வரோம். நீ அங்கேயே இருடா”

சொல்லிக்கொண்டே சட்டையைப் பிழிந்தான். ரத்தமாய் கொட்டியது. எந்த அசூசையும் இல்லாமல் அதைப் போட்டுக் கொண்டான். மழை சன்னமாய் விட்டிருந்தது. மூவரும் எதுவுமே நடக்காததுபோல் கிளம்பிவிட்டார்கள்.

நீராளர் வேலுவின் மருமகள் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து வராண்டாவைக் கழுவி விட்டாள்.

அண்ணன் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவராய் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார். அவரைத் தேற்ற வேண்டும்.

தெய்வம் எதுவுமில்லை என்பதில் நமக்கு தெளிவு உண்டு.

உயிரை காப்பது தெய்வக் குணம் என்கிறார்கள்.

எனில் அடிபட்ட பிள்ளையின் உயிரைக் காக்கப் போராடிய என் நான்கு பிள்ளைகளும் தெய்வங்கள்தான்.

அவர்கள் தெய்வங்கள் எனில் நான்?

நான்....

தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவன்.

No comments:

Post a Comment